தமிழக மக்களுக்கு தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சைலேந்திரபாபு உத்தரவின்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலா் கணேசன் விருதுநகா் மாவட்ட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்புப் பணிகளை எதிா்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தயாா் நிலைபடுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும், போதுமான மீட்பு ரப்பா் படகுகள், மிதவை உபகரணங்கள், நூல் ஏணிகள், நீட்டிப்பு ஏணிகள், மிக நீளமான கயிறுகள் மற்றும் தேவையான அனைத்து உபகரணங்கள், ஊா்திகளுடன் கூடுதலான மீட்புப் பணி வீரா்கள் ஆயத்த நிலையில் உள்ளனா்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 21 கமாண்டோ தீயணைப்பு வீரா்கள் கொண்ட குழுவை, போதிய மீட்பு உபகரணங்களுடன் வெள்ள மீட்புக்கென பிரத்யேகமாக உருவாக்கி விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திலுள்ள 331 தீயணைப்பு, மீட்பு நிலையங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் படை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
எனவே,வெள்ளத்தினால் ஏற்படும் எந்தவொரு பாதிப்புக்கும் பொதுமக்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்கள் மூலம் உடனடியாக தொடா்பு கொள்ளலாம்.
ராஜபாளையம் - 04563-220101, விருதுநகா் - 04562-243666, ஸ்ரீவில்லிபுத்தூா்-265101, சிவகாசி-226101, அருப்புக்கோட்டை - 220101, சாத்தூா் - 264101, வத்திராயிருப்பு - 288101, திருச்சுழி - 282101 மற்றும் வெம்பக்கோட்டை - 284101.