ராஜபாளையம் நகராட்சியில் கட்டடங்களுக்கு ஏற்ப குடிநீர் வரியை உயர்த்த எதிர்ப்பு
ராஜபாளையம் நகராட்சியில் கட்டட விஸ்தீரணத்துக்கு ஏற்பட குடிதண்ணீர் வரியை உயர்த்த
ராஜபாளையம் நகராட்சியில் கட்டட விஸ்தீரணத்துக்கு ஏற்பட குடிதண்ணீர் வரியை உயர்த்த முடிவெடுத்துள்ளதை மறுபரிசீலனை செய்ய தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜபாளையம் நகராட்சி சார்பில் நகராட்சி பகுதிகளுக்கு உள்பட்ட குடிநீர் கட்டணம் மற்றம் குடிநீர் இணைப்புகளுக்கான வைப்புத் தொகை வரும் ஏப்ரல் 1 முதல் உயர்த்த உத்தேசித்துள்ளதாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:
வீட்டு உபயோகம் மற்றும் வணிக உபயோகத்துக்கான குடிநீர் கட்டண வீதங்கள் மக்களின் பொருளாதார நிலை, குடிநீரின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில், கட்டடங்களின் விஸ்தீரண அடிப்படையில் வகைப்பாடு செய்து குடிநீர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது நகராட்சி சட்ட விதிகளுக்கு இயற்கை நீதிக்கும் புறம்பானது. குடிநீர் கட்டணத்தை பயனீட்டாளர்களின் பயன்பாடு அளவிலேயே நிர்ணயம் செய்வதுதான் சரியானதாகும். குறைந்த அளவுள்ள கட்டடமாக இருந்தாலும் குடியிருப்பு எண்ணிக்கை மிகுதியாக இருந்தால் குடிநீர் உபயோகம் அதிகமாக இருக்கும். அதேபோல் கட்டட விஸ்தீரணம் அதிகம் உள்ள கட்டடங்களில் பயன்பாட்டாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தால் குடிநீர் பயன்பாடும் குறைவாகவே இருக்கும். இதை கருத்தில் கொள்ளாமல் ஏற்கெனவே செலுத்தி வரும் விகித்தில் இருந்து 3 மடங்கு குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பது சரியானதல்ல. குடிநீர் பயன்பாட்டாளர்களை மூன்று வகையாக பிரித்து கட்டணம் வசூல் செய்யும் முறை அமலில் இருந்து வரும் நிலையில், கட்டட விஸ்தீரண அடிப்படையில் நான்கு விகிதமாக வகைப்பாடு செய்தது முறையல்ல. நகராட்சியில் குடிநீர்இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு 7முதல் 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களை மேலும் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.
எனவே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கண்ட அறிவிப்பினை மறுபரிசீலனை செய்து ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.