குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதி: பாஜக புகார்
விடுமுறை நாளில் விஐபி தரிசன முறையில் கேரள முதல்வருக்கு எப்படி அனுமதியளிக்கலாம்? - பாஜக
திருவனந்தபுரம் : குருவாயூர் கோயிலில் கேரள முதல்வருக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சிறப்பு அனுமதியளிக்கப்பட்டதாக பாஜக புகார் அளித்துள்ளது.
கேரள முதல்வராக அண்மையில் பதவியேற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் வி. டி. சதீசன் ஞாயிற்றுக்கிழமை(மே 24) காலை 7 மணியளவில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அவர் அக்கோயிலில் பிரசித்தி பெற்ற ‘துலாபாரம்’ நேர்ச்சையையும் நிறைவேற்றினார்.
அதனைத் தொடர்ந்து, அதே கோயில் வளாகத்தில் நடைபெற்ற அம்மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஏ. பி. அனில் குமாரின் மகன் திருமண விழாவுக்குச் சென்று புதுமண தம்பதியரை வாழ்த்தினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கேரளத்தில் விடுமுறை நாள்களில் கோயில்களில் விஐபி தரிசன முறைக்கு தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் விதித்துள்ள உத்தரவை மீறி அம்மாநில முதல்வருக்கு குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாஜக புகார் அளித்துள்ளது.
இது குறித்து, பாஜக முத்த தலைவர் பி. கோபாலகிருஷ்ணன் குருவாயூர் கோயில் தேவஸ்வம் அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்ட நேரத்திலும் சதீசன் மற்றும் அவருடன் வருகை தந்த தலைவர்களுக்கும் விஐபி தரிசன முறையில் அனுமதியளிக்கப்பட்டது. ‘சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டத்தை மீறிச் செயல்பட்டுள்ளனர்’. தேவஸ்வம் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளைத் தொடருவோம்.
மேலும், இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றில், கோயில் நடைமுறைப்படி, ‘ஸ்ரீகோயில் நெய்விளக்கு’ ரசீது பெற்றவர்களே சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
ஆனால், சதீசனுக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை(மே 24) காலை 7.30 மணி - 9.30 மணி வரை, விடுமுறை நாள்களில் சிறப்பு தரிசனத்துக்கென கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறையான ரூ. 4,500 கட்டணம் செலுத்தி எடுக்கப்பட வேண்டிய ‘ஸ்ரீகோயில் நெய்விளக்கு’ ரசீதையும் பெறாமல் அவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் உள்பட பல்வேறு விஐபி-கள் கோயில் வளாகத்தில் அங்கிருந்தவர்களின் எதிர்ப்பையும் மீறி புகைப்படம் மற்றும் விடியோ பதிவு செய்ததாகவும் விமர்சித்தார்.
இந்த நிலையில், இது குறித்து தேவஸ்வம் தரப்பிலிருந்து திங்கள்கிழமை(மே 25) வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில், ஞாயிற்றுக்கிழமை (மே 24) விடுமுறை நாள் என்பதால், ரூ. 4,500 ‘ஸ்ரீகோயில் நெய்விளக்கு’ ரசீதைப் பெற்ற பின்பே சதீசன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, குருவாயூர் தேவஸ்வம் தலைவர் ஏ. வி. லோபிநாத் தெரிவித்ததாவது, ‘விடுமுறை நாள்களில் விஐபி தரிசன முறையை தடை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு உள்ளது. ஆனால், முதல்வரோ அவருடைய குழுவோ அத்தகைய விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆயினும், அவர்தம் வருகையால் பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் போனதாக புகார் எழுந்தது. இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்தார்.