விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கட்டங்குடி கிராமத்தில் உள்ள நெசவாளர் பசுமை வீடுகள் குடியிருப்பில் நிழற்குடை இன்றி பயணிகள் அவதிப்படுகின்றனர்.
கட்டங்குடி கிராமத்திலிருந்து பாளையம்பட்டி நோக்கிச் செல்லும் சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள சுமார் 200 -க்கு மேற்பட்ட வீடுகளில் சுமார் 800 -க்கு மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இந் நிலையில், இக்குடியிருப்பிலுள்ள பொதுமக்கள் வசதிக்காக அருப்புக்கோட்டையிலிருந்து பாளையம்பட்டி வழியாக இந்த நெசவாளர் காலனி மற்றும் கட்டங்குடிக்கு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேவேளையில் இப்பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை இன்றி அவதிப்படுகின்றனர்.
இதனால் இந்த நிறுத்தத்தில் கடும் வெயில் மற்றும் மழைக் காலங்களில் பாதுகாப்பாக ஒதுங்கி நிற்க இயலாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். எனவே, இங்கு பயணிகள் நிழற்குடை வசதி செய்துதரக் கோரி கட்டங்குடி ஊராட்சித் தரப்பிடம் பலமுறை முறையிட்டும் யாதொரு நடவடிக்கையும் இல்லையென இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்துப் பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.