நீதிபதியின் உத்தரவின்படி வழக்குப் பதிவு செய்யாத சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதித்து சாத்தூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தேவர் நகரை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி சுகன்யா (19). இவர் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பின்னர் துரை, சுகன்யாவை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தார். இந்த சம்பவம் குறித்து துரை, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தீக்காயமடைந்த சுகன்யாவிடம் சிவகாசி நீதிமன்ற நீதிபதி ஜோசப்ஜான் அரசு மருத்துவமனைக்கு சென்று மரண வாக்குமூலம் பெற்றுள்ளார். அந்த வாக்குமூலத்தில் சுகன்யா கூறும்போது தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்ரா என்பவர் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், இதனால் மனமுடைந்து தீக்குளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி ஜோசப்ஜான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ரவிசந்தர் வழக்குப் பதியவில்லையாம். இதையடுத்து இந்த வழக்கு, சாத்தூர் நீதிமன்ற ஜேஎம் எண் 1-க்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்து போது நீதிபதி சண்முகவேல்ராஜ், காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யத் தவறிய சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரவிசந்தருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.