விருதுநகர் அருகே காமராஜர்புரத்தில் மின்கம்பம் அருகே பள்ளம் தோண்டி குழாய் அமைத்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி புதூரிலிருந்து முதலிபட்டி செல்லும் சாலையில் காமராஜர்புரம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த பலர் பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்து வருகின்றனர். காலையில் பட்டாசு ஆலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மாலை 6 மணிக்கு மேல் தான் வீடு திரும்புவர். இந்நிலையில் காமராஜபுரத்தில் 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இக்கிராமத்தில் மின் கம்பம் அருகே, பெரிய பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் அமைத்துள்ளனர். இப்பள்ளத்தில் அடிக்கடி தண்ணீர் தேங்குவதால் மண் சரிந்து விழுவதாக கூறப்படுகிறது. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்தால் மின் கம்பம் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே குடிநீர் குழாயை வேறு இடத்தில் மாற்றி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.