முகப்பு
விருதுநகர்

மலேசியாவில் மர்மமாக உயிரிழந்த தொழிலாளி உடலைக் கொண்டுவர குடும்பத்தினர் வேண்டுகோள்

மலேசியாவில் மர்மமாக உயிரிழந்த தொழிலாளி உடலைக் கொண்டுவர குடும்பத்தினர் வேண்டுகோள்விடுத்துள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
சந்திரன்(47).
பகிர்:

அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி மலேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவரது உடலை இந்தியா கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இறப்பு குறித்து அரசு விசாரிக்க வேண்டுமெனவும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன்(47). இவருக்குத் திருமணமாகி அன்னக்கிளி எனும் மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியிலும், இளைய மகள் 8-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இதனிடையே சந்திரன் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பாகத் தனியார் முகவர் மூலம் மலேசியாவிற்கு தோட்டப்பணியாளாக வேலைக்குச் சென்றாராம். 

சில மாதங்கள் அவர் முறையாக தனது குடும்பத்திற்குப் பணம் அனுப்பி வந்த நிலையில், தனது வீட்டிற்கும் அவ்வப்போது போன் செய்துவந்தாராம். இந்நிலையில் கடந்த இருமாதங்களுக்கு முன்னர் கடைசியாக போன் செய்த அவர், கரோனா சூழல் காரணமாகப் பணம் அனுப்ப இயலவில்லை என்று தெரிவித்தாராம்.

பின்னர் கடந்த இருமாதங்களாக அவரிடமிருந்து போன் வராத நிலையில், இம்மாதம் 15-ஆம் தேதி சந்திரனின் குடும்பத்தைத் தொடர்பு கொண்ட அரசு அதிகாரிகள், சந்திரன் கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதியே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனராம். 

ஆனால் எப்படி இறந்தார் என்பது குறித்துத் தகவல் கிடைக்கவில்லையாம். இந்நிலையில் பண வசதியில்லாத அவரது  குடும்பத்தார், சந்திரனின் உடலை இந்தியாவிற்குக் கொண்டு வந்து தங்களிடம் ஒப்படைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், அவரது இறப்பில் மர்மம் உள்ளதால் அதுகுறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →