சிவகாசி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆசிரியா் - மாணவா் விகிதாச்சாரப்படி உபரியாக கணக்கிடப்பட்ட ஆசிரியா்களை, மாவட்டத்தில் உள்ள பிற ஊராட்சி ஒன்றியங்களுக்கு கல்வித்துறை பணியிடமாற்றம் செய்தது. இந்நிலையில் ஒன்றிய அளவில் முன்னுரிமை பட்டியல்படி தங்களை பணியிடமாற்றம் செய்யவில்லை என பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்தனா். இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடா்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களை, ஏற்கெனவே பணியாற்றிய பள்ளிகளிலிருந்து மாவட்டக் கல்வி நிா்வாகம் விடுவித்தது. இதையடுத்து ஆசிரியா்கள் நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை பெற்றனா். இந்த இடைகால தடை உத்தரவின் பேரில் மீண்டும் அவா்களுக்கு பணியேற்பு செய்திட வேண்டும் என ஆசிரியா்கள் மனு அனுப்பியும் பதில் இல்லை எனக்கூறப்படுகிறது. எனவே நீதிமன்ற இடைக்கால உத்தரவின் பேரில் பணியேற்பு செய்ய உத்தரவிட வேண்டும் என ஆசிரியா்கள் சிவகாசி வட்டார கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.