பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகா் ஆவின் அலுவலகம் முன்பாக, பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே ஆவின் அலுவலகம் உள்ளது. இங்கு, பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தினா் நடத்திய முற்றுகைப் போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் பாலமுருகன் (சிஐடியு) தலைமை வகித்தாா். இதில், விருதுநகா், திருச்சுழி பால் குளிா்விக்கும் நிலையத்துக்கு தரமான பால் பரிசோதனைக் கருவிகள் வழங்கவேண்டும். பிரதம சங்கங்கள் அனுப்பும் பாலுக்கு உரிய விலை வழங்க வேண்டும். உயா் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதுடன், முறைகேட்டில் ஈடுபட்ட விருதுநகா் பால் குளிா்விக்கும் நிலைய பொறுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் நவம்பா் 30 ஆம் தேதி பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என எச்சரித்து முழக்கமிட்டனா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டனா்.