நீட் தேர்வு மாணவி தற்கொலை: குடும்பத்தினருக்கு உதயநிதி நேரில் ஆறுதல்
நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா குடும்பத்தினரை அவர்களது சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் உள்ள இல்லத்தில் உதயநிதி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா குடும்பத்தினரை அவர்களது சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் உள்ள இல்லத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து குடும்பத்தினருக்கு திமுக சார்பாக ரூ 5 லட்சம் நிதி உதவியும் அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், துயரமான நிகழ்ச்சி இது, மாணவி துர்கா, நாளை நீட்தேர்வு இருக்கும் பொழுது மன அழுத்தம் காரணமாக என்று தன்னுடைய உயிரைப் போக்கி உள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இது சமமற்ற, சம வாய்ப்பு இல்லாத ஏழை மாணவர்கள் மருத்துவராவதை தடுப்பதே இந்த நீட் தேர்வு என திமுக கூறி வருகிறது. கலைஞர் ஏற்கனவே இதுபோன்ற நுழைவு தேர்வை நீக்கினார். கலைஞர், ஜெயலலிதா இருக்கும் பொழுதும் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் தற்போது அதிமுக அரசு, மத்திய அரசினுடைய அடிமையாக இருக்கிறது. ஆண்டுதோறும் மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். இதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட அரியலூரில் விக்னேஷ் என்கின்ற மாணவன் இதேபோன்று நீட் தேர்வு எழுத முடியாமல் தற்கொலை செய்துகொண்டான். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும் என முதல்வர் கூறுகிறார். இதை சொல்வதற்கு எதற்கு முதல்வர். இதை ஒரு மருத்துவர் செல்லலாம், இதற்கு முதல்வர் தேவை இல்லை. ஆட்சியை காப்பாற்றுவதற்காக தில்லி சென்று அதிகமாக பிரதமரை சந்தித்து வருகின்ற முதல்வரும் அமைச்சர்களும் செல்கிறார்கள்.
ஆட்சியை கையில் வைத்திருந்தும் இதை கூட செய்யவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இதேபோன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருந்தது. ஆனால் மாணவர்கள் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக ஒரேநாளில் தில்லியில் மெரினா போராட்டத்தை முடித்து வைத்தார்கள். அப்போது செய்ய முடிந்த அரசு இப்போது செய்ய முடியாதா? மாணவர்கள் தெம்பாக இருங்கள் தைரியமாக எழுதுங்கள் 8 மாதத்தில் ஆட்சி மாறும் நல்ல முடிவு இருக்கும் என்றார்.