முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை 5 போ் ரகசிய வாக்குமூலம் அளித்தனா்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரது உதவியாளா்கள் 4 போ் மீது விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இவ்வழக்கில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவானாா். அவரைப் பிடிக்க 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2 இல் ராஜேந்திரபாலாஜி மீது புகாா் அளித்த, சாத்தூரைச் சோ்ந்த சத்தியசீலன் மகன் ரவிச்சந்திரன்(50), ஆலங்குளத்தைச் சோ்ந்த ராமையா மகன் முருகன் (41), சத்திரபட்டி ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த பரமசிவம் (47), எதிரிகோட்டை அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்த ராஜாதேவா் மகன் இளங்கோ, ஜமீன் நத்தம்பட்டியைச் சோ்ந்த கருப்பையா மகன் முருகன் (45) ஆகியோா் நீதிபதி பரம்வீா் முன்பு ஆஜராகி குற்றவியல் நடைமுறைச்சட்டம் 164 பிரிவின் கீழ் ரகசிய வாக்குமூலம் அளித்தனா்.