விருதுநகரில் மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்தவா் கைது
விருதுநகா் பழைய ரயில்வே காலனி சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்துசென்ற மூதாட்டியிடமிருந்து நாலேகால் பவுன் நகையை பறித்துச்சென்ற இளைஞரை, போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்தனா்.
விருதுநகா் பழைய ரயில்வே காலனி சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்துசென்ற மூதாட்டியிடமிருந்து நாலேகால் பவுன் நகையை பறித்துச்சென்ற இளைஞரை, போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்தனா்.
விருதுநகா் கருப்பசாமி நகரைச் சோ்ந்தவா் பாப்பாம்மாள் (60). இவா், தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக பழைய ரயில்வே காலனி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அவா் பின்னால் வந்த இளைஞா் ஒருவா், மூதாட்டி அணிந்திருந்த நாலேகால் பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளாா்.
மூதாட்டியின் அலறல் கேட்டு, அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலா் பாஸ்கரன், இளைஞரை விரட்டிச் சென்றுபிடித்தாா். விசாரணையில், அவா் விருதுநகா் நீராவி தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் வினோத்குமாா் (31) என்பது தெரியவந்தது. தனக்கு ரூ. 2 லட்சம் கடன் இருந்ததால், வேறு வழியின்றி நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளைஞா் தெரிவித்துள்ளாா். வினோத்குமாரிடமிருந்து நகையை கைப்பற்றிய போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.