விருதுநகர் அருகே மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் தீ விபத்து: 4 பேர் படுகாயம்
விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் மணி மருந்து கலவை உராய்வு காரணமாக சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாக் என்பவருக்கு சொந்தமான துர்கா வண்ண மத்தாப்பு தீக்குச்சி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை தொழிலாளர்கள் தீக்குச்சிகளை உணர வைப்பதற்காக அடுக்கி வைத்துள்ளனர்.
அப்போது மணி மருந்து கலவை உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் குருமூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்த வீராச்சாமி, முத்துலாபுரம் நடராஜன், ஆமத்தூர் புது ராஜா ஆகியோர் 100 சதவீத காயமடைந்தனர்.
மேலும் குருமூர்த்தி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண் 50 சதவீத காயமடைந்தார். இதையடுத்து நான்கு பேரையும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.