விருதுநகா் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளாகப் பணிபுரியும் செவிலியா்கள், பணி நிரந்தரம் செய்யக் கோரி செவ்வாய்க்கிழமை பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதார துறை இணை இயக்குநா் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டுச் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜேசு டெல் குயின் தலைமை வகித்தாா். அப்போது, திமுக தோ்தல் வாக்குறுதியளித்தபடி கடந்த 6 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். கரோனா காலத்தில் முன்களப் பணியாளா்களாகப் பணிபுரிந்த செவிலியா்களுக்கு தமிழக அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.