முகப்பு
விருதுநகர்

மொட்டமலை சிறப்பு காவல் படையினருக்கு ரத்த தான முகாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மொட்டமலை சிறப்பு காவல் படை மைதானத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ரத்த தானம் மற்றும் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

இந்த முகாமில் 150 காவலா்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனா். இதன்மூலம் சுமாா் 4.5 லிட்டா் ரத்தம் சேகரித்தனா். மேலும் அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமில் பட்டாளியன்கள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் 300 போ் கலந்துகொண்டு ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு, இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளை செய்துகொண்டனா்.

பின்னா், மொட்டமலை நரிக்குறவா் காலனியில் சுகாதார வளாகம் மற்றும் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து, அப்பகுதிக்கு சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்து தர சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் திலகவதி, சாா் - ஆட்சியா் பிருத்திவிராஜ், செயற்பொறியாளா் முருகன், உதவி செயற்பொறியாளா் சிவகாமி, வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலா் சபரீஷ் பிரபு மற்றும் சிறப்பு காவல் படை காவலா்கள் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.