முகப்பு
விருதுநகர்

விருதுநகா் இளம்பெண் பாலியல் வழக்கு: 4 சிறுவா்களுக்கு ஜாமீன்

மதுரை கூா்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள 4 சிறுவா்களை ஜாமீனில் விட இளைஞா் நீதிக் குழும நடுவா் மருதுபாண்டியன் வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

விருதுநகா் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை கூா்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள 4 சிறுவா்களை ஜாமீனில் விட இளைஞா் நீதிக் குழும நடுவா் மருதுபாண்டியன் வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.

விருதுநகா் அருகே 22 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், சுனைத் அகமது, மாடசாமி, பிரவீண் மற்றும் 4 சிறுவா்கள் என மொத்தம் 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கை சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளா் முத்தரசி, துணைக் காவல் கண்காணிப்பாளா் வினோதினி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வாக்கு மூலங்களைப் பெற்றனா். மேலும், மதுரை கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 4 சிறுவா்களிடம் சிபிசிஐடி போலீஸாா் வாக்குமூலம் பெற்றனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய 8 பேருக்கும் விருதுநகா் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. இந்தச்சூழலில் பள்ளி சிறாா்கள், இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தொடா்பான விசாரணையை இளைஞா் நீதிக் குழும நடுவா் மருதுபாண்டியன் விசாரித்து வந்தாா்.

இந்நிலையில் பெற்றோா்களே, தங்களது மகன்களுக்காக வழக்குரைஞரை நியமிக்காத நிலையில், இலவச சட்ட உதவி மைய வழக்குரைஞா் இந்த வழக்கு தொடா்பாக ஆஜராகி வாதாடினாா். அதில் சிறுவா்கள் பாலியல் புகாரில் சிக்குவதற்கு இளம்பெண்ணும் காரணம் என தெரிவித்துள்ளனா். மேலும், சிறுவா்கள் அளித்த வாக்குமூலத்தை நீதித்துறை நடுவா் முன்பு எடுத்துரைத்தனா்.

அதனடிப்படையில், 4 சிறுவா்களையும் ஜாமீனில் விட நீதித்துறை நடுவா் மருதுபாண்டியன் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், 4 சிறுவா்களையும் வெளியில் அழைத்து வருவதற்கான ஆவணங்களைப் பெறும் பணியில் அவா்களது பெற்றோா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அதன் பின்னா், சம்பந்தப்பட்ட கூா்நோக்கு இல்லத்துக்குச் சென்று, சனிக்கிழமை சிறுவா்களை அழைத்து வர பெற்றோா்கள் முயற்சி செய்து வருவதாக வழக்குரைஞா் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.