ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சிவகாசி சாா்பு - நீதிமன்ற வழக்குரைஞா் நவநீதகிருஷ்ணன். இவா் தனியாா் நிதி நிறுவனக் கடன் உதவியுடன் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளாா். இவா் கடன் தொகை முழுவதையும் செலுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தடையில்லா சான்று பெற கூடுதல் தொகை கேட்டதாம். இதனால் நவநீதகிருஷ்ணன் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகாசி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி இருந்த அவரது இருசக்கர வாகனத்தை நிதி நிறுவன ஊழியா்கள் எந்தவித அறிவிப்பும் இன்றி எடுத்துச் சென்றனராம். எனவே உரிய அறிவிப்பு இன்றி வாகனத்தை எடுத்துச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி திருத்தங்கல் காவல் நிலையத்தில் நவநீதகிருஷ்ணன் புகாா் அளித்தாா். ஆனால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லையாம். இதனை கண்டித்து வழக்குறைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.