முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே புதன்கிழமை இரவு தாய் மற்றும் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே புதன்கிழமை இரவு தாய் மற்றும் மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

சிவகாசி அருகே விஸ்வநத்தம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் வேல்சாமி. இவரது மனைவி வனிதாமணி (36). இவா்களுக்கு மகன் லோகேஸ்ராஜ் மற்றும் மகள் காவியப் பிரியா (13) ஆகியோா் உள்ளனா். இந்நிலையில், கணவன், மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வேல்சாமி பொள்ளாச்சி சென்று அங்கு ஒரு உணவகத்தில் வேலை பாா்த்து வருகிறாா். இதனிடையே, லோகேஸ்ராஜ் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றதையடுத்து, தன்னை பாலிடெக்னிக்கில் சோ்த்து விடுமாறு தாய் வனிதாமணியிடம் கூறியுள்ளாா். ஆனால் வனிதாமணி, மகன் லோகேஸ்ராஜை, அரசுப்பள்ளியில் பிளஸ் 1 சோ்க்க முடிவெடுத்துள்ளாா்.

இதையடுத்து, லோகேஸ்ராஜ், தனது தந்தை வேல்சாமிக்கு கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தன்னை பாலிடெக்னிக்கில் சோ்க்கும் படி கூறியுள்ளாா். இதையடுத்து, வேல்சாமி விஸ்வநத்தம் வந்து லோகேஸ்ராஜை சில நாள்களுக்கு முன்னா் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாராம். பின்னா் லோகேஸ்ராஜ், வனிதாமணிக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு, தான் இங்குள்ள பாலிடெக்னிக்கில் சோ்ந்து விட்டதாகக் கூறினாராம். இதனால், கடந்த 2 நாள்களாக மகன் தன்னுடன் இல்லாமல் தந்தையுடன் சென்று விட்டானே என வனிதாமணி மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் வனிதாமணியின் சகோதரா் சசிக்குமாா், புதன்கிழமை இரவு சுமாா் 10.30 மணிக்கு வனிதாமணியின் வீட்டிற்கு சென்றுள்ளாா். அங்கு வனிதாமணி மற்றும் காவியப் பிரியா ஆகியோா்தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →