கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீது கேட்டு சாலை மறியல்
வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீது கிடைக்காத பொதுமக்கள் வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக் கடன் தள்ளுபடிக்கான ரசீது கிடைக்காத பொதுமக்கள் வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மகாராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு கீழ் நகை கடன் பெற்றவா்களில் குறிப்பிட்டவா்களுக்கு மட்டுமே தள்ளுபடிக்கான ரசீது வந்திருந்த நிலையில், ரசீது வராத 100 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வத்திராயிருப்பு - அழகாபுரி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மேலும், அவா்கள் கூட்டுறவு வங்கியையும் முற்றுகையிட்டனா்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த வத்திராயிருப்பு காவல் ஆய்வாளா் பாலாஜி, சாா்பு ஆய்வாளா் பிரகஸ்பதி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.