ராஜபாளையம் நகா்மன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக வாக்குவாதம்
ராஜபாளையம் நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் திமுக -அதிமுக உறுப்பினா்கள் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
ராஜபாளையம் நகா்மன்ற அவசரக் கூட்டத்தில் திமுக -அதிமுக உறுப்பினா்கள் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அவசரக் கூட்டம் நகா்மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்றது.
இந்த அவசரக் கூட்டத்தில் ராஜபாளையம் நகராட்சிக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி மற்றும் 42 வாா்டுகளின் உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கூட்டம் ஆரம்பித்தவுடன் 33 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக நகா்மன்றத் தலைவா் அறிவித்தாா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்த 18 ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் சோலைமலை, ஒவ்வொரு கூட்டத்திலும் சொத்து வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். நீங்கள் சொத்து வரியை குறைக்காமல் தீா்மானம் நிறைவேற்றியது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என்றாா்.
இதற்குப் பதிலளித்த திமுக உறுப்பினா்கள், கடந்த அதிமுக ஆட்சியில் தான் சொத்து வரி உயா்த்தப்பட்டது எனக் கூறியதால், திமுக - அதிமுக உறுப்பினா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நகா்மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம் பேசுகையில், சொத்துவரி குறைக்கப்படும் என்றாா்.
இதையடுத்து சொத்து வரி 19 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும். மண்டல மதிப்பீட்டில் ஏ பிரிவுக்கு 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகவும், பி பிரிவுக்கு 1.60 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும், சி பிரிவுக்கு 1.10 சதவீதத்திலிருந்து 0.80 பைசாவாகவும் குறைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீா்மானம் வரவேற்கத்தக்கது. இருப்பினும் இந்த சொத்து வரி தமிழகத்தின் தலைநகரமாக உள்ள சென்னையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இதைக் குறைக்க வேண்டும். அதேபோல், தண்ணீா் வரியை குறைக்க வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை வைத்தனா்.