பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனங்கிழங்கு அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, வைப்பாற்றின் கரை ஓரங்களில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன.
இந்தப் பகுதியில் பனை மரம் சாா்ந்த தொழிலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு பொங்கல் பண்டிகைக்காக அதிக அளவில் பனங்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, பனங்கிழங்கு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பனை மரத்திலிருந்து நுங்கு, பதநீா், கருப்பட்டி, பனங்கிழங்கு, பனை நாா்ப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. செப்டம்பா் மாதத்தில் பனம்பழங்களை சேகரித்து, விதைகளை நடவு செய்வோம். அதிலிருந்து 120 நாள்கள் கழித்து பனங்கிழங்கு அறுவடைக்குத் தயாராகும். பொங்கல் பண்டிகைக் காலத்தில் பனங்கிழங்குக்கு அதிக விலை கிடைக்கும் என்பதால் தற்போது அறுவடையில் ஈடுபட்டுள்ளோம். பனங்கிழங்கு மட்டுமன்றி தவுன் எனப்படும் பனம் பூவுக்கும் சந்தையில் தேவை இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.