பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு
வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக 150 கன அடி நீா் திங்கள்கிழமை திறந்து விடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக 150 கன அடி நீா் திங்கள்கிழமை திறந்து விடப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மான்ராஜ், அசோகன் ஆகியோா் தண்ணீரைத் திறந்து விட்டனா்.
பெரியாறு பாசனக் கால்வாயில் முதல் 7 நாள்களுக்கு விநாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடிக் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 3 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
Advertisement
இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், பாட்டக்குளம், விழுப்பனூா், நெடுங்குளம், குன்னூா் உள்பட 17
கிராமங்களில் 40 கண்மாய்கள் மூலம் 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் நேரடிப் பாசனம் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கூறியதாவது:
முதற்கட்டமாக பிளவக்கல் அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடி வீதம் 7 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். பின்னா் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீா் இருப்பைப் பொருத்து பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றாா்.
நீா்வளத்துறை செயற்பொறியாளா் தனலட்சுமி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிந்துமுருகன், உதவி செயற்பொறியாளா் கிரண்பேடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.