எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி...
தொகுதி மறுவரையறை மசோதா தாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தொகுதி மறுவரையறை: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் தீ பரவட்டும்! பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
Advertisement
அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ தில்லியைச் சுட்டெரித்தது. தில்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும்.
பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"” எனக் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கட்சியினர், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபடுவர் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், வியாழக்கிழமை காலை நல்லிபாளையத்தில் மேற்கு நகர அவை தலைவர் என்.கே. செல்லப்பன் வீட்டின் முன் நிறுவப்பட்டிருந்த 20 அடி உயர கொடிக்கம்பத்தில் கருப்பு கொடியை ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு தொகுதி மறு வரை மசோதாவின் நகலை அவர் தீயிட்டு கொளுத்தி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.