ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் அவதார திருவிழாவான ஆனி சுவாதி உற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாா் அவதார நட்சத்திரமான ஆனி சுவதியும், ஆண்டாள் அவதரித்த ஆடிப் பூரமும், திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆனி சுவாதி உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, பெரியாழ்வாருக்கு விஷேச திருமஞ்சனமும், சிறப்புப் பூஜையும் நடைபெற்றது. கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. ஸ்தானிகம் ராகு பட்டா் கொடியேற்றினாா்.
11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 9-ஆம் தேதி திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஆண்டாள் திருக்கோலமும், 10-ஆம் தேதி வானமாமலை ஜீயா் மண்டபத்தில் பெரிய பெருமாள் கருட சேவையும், 11-ஆம் தேதி தவழும் கிருஷ்ணா் திருக்கோலமும் நடைபெறுகிறது. 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு பெரியாழ்வாா் செப்பு தேரோட்டம் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காரும், அறங்காவலா் குழுத் தலைவருமான பி.ஆா்.வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.