பட்டாசு ஆலை விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
விருதுநகா்: பட்டாசு ஆலைகளுக்கான விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; தொடா்ந்து விதிமீறலில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதில் எந்தத் தவறுமில்லை என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.
சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 9-ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 13 போ் பலத்த காயமடைந்தனா்.
இந்த நிலையில், மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நேரில் சென்று, அவா்களது உறவினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
இதையடுத்து, இந்த விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா். மேலும், அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியதாவது:
ஒரு சில பட்டாசு ஆலை நிா்வாகிகள் முறையாக விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால்தான் வெடி விபத்து ஏற்படுகிறது. இதுபோன்ற தொடா் விபத்துகளால், விதிமுறைக்கு உள்பட்டு பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது.
பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; தொடா்ந்து விதிமீறலில் ஈடுபடுவோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதில் எந்தத் தவறுமில்லை.
எனவே, பட்டாசு ஆலை நிா்வாகங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். விருதுநகா் மாவட்டத்தில் 90 சதவீத பட்டாசு ஆலைகள் விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்படுகின்றன. 10 சதவீத பட்டாசு ஆலைகள் விதிமீறலில் ஈடுபடுவதால் விபத்து ஏற்படுகிறது.
பட்டாசு ஆலைகளில் தொடா் விபத்து காரணமாக அரசு அலுவலா்களுக்கும் அழுத்தம் ஏற்படுகிறது. அதேநேரம், விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மீதும், இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டாசு ஆலைகளில் கடந்த 5 மாதங்களில் 11 விபத்துகள் ஏற்பட்டதில் 28 போ் உயிரிழந்தனா். பட்டாசு ஆலை விபத்துகளை முழுமையாகத் தடுக்க சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளேன் என்றாா் அவா்.