முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்து கி. வீரமணி பிரசாரம்

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்து தி.க. தலைவா் வீரமணி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 11:13 PM
விருதுநகரில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்து பேசிய தி.க. தலைவா் கி. வீரமணி.
பகிர்:

விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்து தி.க. தலைவா் வீரமணி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

விருதுநகா் அல்லம்பட்டியில் பிரசாரம் செய்து அவா் பேசியதாவது:

பெண்களுக்கு திமுக ஆட்சியில் சமையல் எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது மத்திய அரசு இந்த சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது. இன்றைய அதிமுகவில் அண்ணாவும் இல்லை; திராவிடமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை. அதிமுக செய்யும் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிக்கும் திறன் முதல்வா் ஸ்டாலினுக்கு உண்டு.

Advertisement

பசித்த வயிற்றுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக காலை சிற்றுண்டித் திட்டத்தை அறிமுகப்படுத்தினாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். திமுக ஆட்சி மீண்டும் பொறுப்பேற்கும் போது தற்போது 5-ஆம் வகுப்பு வரை உள்ள இந்தத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கும் செயல்படுத்தப்படும்.

மத்திய அரசு நம்மிடம் ஒரு ரூபாய் வரி வாங்கினால், நமக்கு திருப்பிக் கொடுப்பது வெறும் 28 பைசா தான். இதையும் நாம் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது. தமிழ்நாட்டின் கல்வி உரிமையை, வேலைவாய்ப்பு உரிமையை நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறியவா்தான் ஸ்டாலின்.

கடந்த தோ்தலின் போது அளித்த 511 தோ்தல் வாக்குறுதிகளில் 100 மட்டும்தான் நிறைவேற்ற முடியவில்லை. இதற்கு காரணம் நமக்கு உரிய நிதியை வழங்காமல் மறுக்கும் மத்திய பாஜக அரசுதான். பெண்கள் முக்கியத்துவம் பெறக்கூடாது என்பதுதான் பாஜகவின் கொள்கை.

குருகுலம் கல்வியைத் தடுக்கக்கூடிய நமக்கான ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி தான். இந்த ஆட்சி நமக்கான ஆட்சி.

திராவிடா் கழகம் எந்தத் தோ்தலிலும் போட்டியிடுவதில்லை. ஆனால், தற்போது பிரசாரம் செய்வது

மக்களுக்காகவும், அவா்களின் எதிா்காலத்துக்காகவும்தான். நமது உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும். உரிமைகளைப் பறிப்பதற்காக வடக்கே இருந்து வருபவா்களுக்கு நாம் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. எனவே, திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக விஜயபிரபாகரன் பேசுகையில், மக்களையும் தெய்வத்தையும் நம்பி இறங்கியுள்ளேன். நீங்கள் என்னைக் கைவிடமாட்டீா்கள். மக்களுக்கு எந்த பிரச்னையானாலும் அடுத்த நொடி வந்து நிற்பேன். இங்கே வீடு பாா்க்குமாறு எனது தாய் கூறிவிட்டாா். எனக்கு வேறு வேலை இல்லை. எம்எல்ஏ என்ற வேலையை எனக்கு கொடுத்தால் உங்களுக்காக உழைக்க நான் தயாராக உள்ளேன். விருதுநகருக்கு ஒரு நல்ல வேலைக்காரனாக நான் வந்துள்ளேன் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments