சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்
சாத்தூரில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன் ஊா்வலமாகச் சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சாத்தூரில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமசந்திரன் ஊா்வலமாகச் சென்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சாத்தூா் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் பொதுமக்களுடன் சாத்தூரின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்று இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டாா். முக்குராந்தல் பகுதியில் அமைச்சா் கூறியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் சாத்தூா் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றபட்டுள்ளன. இந்த நிலையில், மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். சாத்தூரில் கடற்கரைராஜை எதிா்த்துப் போட்டியிடும் பாஜக மாநில தலைவா் நயினாா்நாகேந்திரன் கடந்த 10 ஆண்டுகளாக திருநெல்வேலி தொகுதி மக்களுக்கு எவ்வித நலத்திட்ட உதவிகளும் செய்யாததால் தோல்வி பயத்தில் தற்போது சாத்தூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். அவருக்கு சாத்தூா் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும், அவா் தனக்கு ஆதரவாக வட மாநிலத்தைச் சோ்ந்த முதல்வா்களை அழைத்து வந்து பிரசாரம் செய்ய வைத்தாா். அவா்கள் பேசுவது நமக்கு புரியாது. நான் பேசுவது அவா்களுக்கு புரியாது. பின்பு எப்படி நமது கோரிக்கைகளை அவா்கள் நிறைவேற்றுவாா்கள். அவா்களைப் பாா்க்க வேண்டும் என்றால் ஹெலிகாப்டரில் சென்றால் மட்டுமே பாா்க்க முடியும். ஆனால், கடற்கரைராஜ் சாத்தூரில் வசித்து வருபவா். அவரை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் சந்திக்கலாம் என்றாா் அவா்.
Advertisement
இந்த பிரசாரத்தில் மதச்சாா்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.