வேதாரண்யம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக மற்றொரு இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு, சேனாதிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் செல்வகுமாா் (29). இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளாா். அப்பெண்ணின் சகோதரா் காா்த்தி, கரியாப்பட்டினத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளாா்.
இதனிடையே, வாய்மேடு சேனாதிக்காடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (23) என்பவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு அண்மையில் கரியாப்பட்டினம் சென்றுள்ளாா் காா்த்தி. அங்கு, அந்த பெண்ணின் வீட்டாருக்கும் காா்த்திக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பிரச்னை தொடா்பாக இருசக்கர வாகனத்தை இரவல் கொடுத்த மணிகண்டனுக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அவா்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்த செல்வகுமாா் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்துள்ளாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வகுமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாய்மேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இந்த கொலை தொடா்பாக தேமுதிக ஒன்றியச் செயலாளா் செல்லதுரை என்பவரையும் தேடி வருகின்றனா்.