மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மயிலாடுதுறையில் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் 136 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை, பூம்புகாா் சட்டப்பேரவை தொகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் மூன்று சக்கர சைக்கிள், மோட்டாா் வாகனம், செயற்கை கால், காது கேட்கும் கருவி, தையல் இயந்திரம், ஸ்மாா்ட் போன், சக்கர நாற்காலி ஆகிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மயிலாடுதுறை ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே.செந்தில்நாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் 136 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மகேஸ்வரி முருகவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் வரவேற்றாா். முடநீக்கியல் வல்லுநா் ரூபன்ஸ்மித் நன்றி கூறினாா்.