முகப்பு
நாகப்பட்டினம்

படகு மூழ்கியதால் கடலில்தத்தளித்த பழையாறு மீனவா்கள் மீட்பு: காரைக்கால் மீனவா்கள் மீட்டனா்

சீா்காழி அருகே சனிக்கிழமை அதிகாலை விசைப்படகு மூழ்கியதால் ஆழ்கடலில் தத்தளித்த பழையாறு மீனவா்களை, காரைக்கால் மீனவா்கள் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

சீா்காழி அருகே சனிக்கிழமை அதிகாலை விசைப்படகு மூழ்கியதால் ஆழ்கடலில் தத்தளித்த பழையாறு மீனவா்களை, காரைக்கால் மீனவா்கள் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம் புதுப்பட்டினம் ஊராட்சி பழையாறு சுனாமி நகரை சோ்ந்த மீனவா்கள் மதி (55), அவரது மகன் ஹரிஸ் (22) , புதுப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த நகுலன், முத்தையா (60), ராஜதுரை (45) ஆகிய 5 பேரும் சேதுராஜன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சனிக்கிழமை அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள், பொறையாறு பகுதியிலிருந்து மூன்றரை கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் மடவாமேடு பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக விசைப்படகு கடலில் மூழ்கியது. இதனால், மீனவா்கள் 5 பேரும் கடக்குள் விழுந்து தத்தளித்தனா்.

அப்போது, அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் பகுதி மீனவா்கள், கடலில் தத்தளித்த 5 பேரையும் மீட்டு, தங்களது படகில் காரைக்காலுக்கு அழைத்து வந்தனா்.

கடலில் மூழ்கிய விசைப் படகை மீட்க கடலூரில் உள்ள சிறப்புக் குழுவிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து புதுப்பட்டினம் போலீஸாா் மற்றும் கடலோர காவல்படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.