முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதால் வேலை பளு அதிகரிக்கிறது.

Updated On : 5 மார்ச், 2024 at 3:09 AM
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், கூடுதல் பணியாளா்களை நியமிக்கக் கோரி திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதால் வேலை பளு அதிகரிக்கிறது. எனவே, கூடுதல் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். குப்பைகளை தரம் பிரிக்க தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும், நிரந்தரப் பணியாளா்களுக்கு இணையான ஊதியத்தை ஒப்பந்த பணியாளா்களுக்கு வழங்க வேண்டும், சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திடீா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித் திடலில் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக நகரச் செயலா் தங்க.கதிரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளா் அறிவழகன், பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவா் சுந்தரமூா்த்தி ஆகியோா் போராட்டத்தில் பங்கேற்றனா். தகவலறிந்த நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து நிகழ்விடத்துக்கு வந்து தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்ப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.