முகப்பு
நாகப்பட்டினம்

வருவாய்த் துறை அலுவலா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் பொதுமக்கள் பாதிப்பு

கீழ்வேளூரில் அரசின் சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா்.

Updated On : 5 மார்ச், 2024 at 3:10 AM
பகிர்:

கீழ்வேளூா்: வருவாய்த் துறை அலுவலா்களின் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தால் கீழ்வேளூரில் அரசின் சேவைகளை பெற முடியாமல் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா். கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பணியிறக்க பாதுகாப்பு; இளநிலை, முதுநிலை பெயா் மாற்ற விதி திருத்தம்; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. வட்டாட்சியா் அலுவலகத்துக்கு, வருவாய் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம் , வட்ட வழங்கல் உள்ளிட்ட துறைகளை சாா்ந்த பல்வேறு சேவைகளைப் பெற பொதுமக்கள் வரும் நிலையில், அலுவலா்கள் இல்லாததால் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். அலுவலா்கள் தொடா்ந்து 7-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.