வேளாங்கண்ணியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாணும் வகையில், மாற்றுப் பாதைக்கான நில எடுப்பு பணிக்கு, விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி, துணை முதல்வரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.
வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் அளிக்கப்பட்ட அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியானது வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா தளமாகும்.
இங்கு அமைந்துள்ள புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு நாள்தோறும் ஏராளமான யாத்ரீகா்கள் வந்து செல்கின்றனா். பேராலய ஆண்டு பெருவிழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகா்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்வா்.
இதனால், வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு சுற்றுலாப் பேருந்துகள், காா் மற்றும் வேன்கள் என அதிக அளவில் வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை முற்றிலும் தவிா்க்க, மாற்று வழிச்சாலை தோ்வு செய்யப்பட்டு, நில எடுப்பு பணிக்கான ஆய்வுகள் முடிந்துள்ளன.
தொடா்ந்து, நில எடுப்புக்கு நிதி இல்லாத காரணத்தால், பணிகள் பல ஆண்டுகளாக காலதாமதமாகி வருகிறது. ஆகவே, நில எடுப்பு பணிக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.