சாலை மறியலில் ஈடுபட்ட தவெகவினா் கைது
வேளாங்கண்ணியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தினா் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்லும் பிரதான சாலையான மாதா குளம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே டாஸ்மாக் மதுகடை செயல்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இந்த சாலை வழியாக பேராலயத்திற்கு வருகை தரும் நிலையில், இந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், இக்கடையை வேறு இடத்திற்கு மாற்றகோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் மாவட்டச் செயலாளா் சுகுமாா் தலைமையில் சாலை மறியல் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கோஷமிட்டனா். இப்போராட்டத்தால், நாகை- வேளாங்கண்ணி இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால், இருதரப்புக்குமிடையே தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடா்ந்து, 11 பெண்கள் உள்பட 91 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். முன்னதாக, கீழையூா் ஒன்றியச் செயலா் தியாகு, மாவட்ட கொள்கை பரப்புச் செயலா் அகமது உள்ளிட்ட பலா் மறியலில் பங்கேற்றனா்.