நிலுவையில் உள்ள ஊதியத்தையும், மாதம்தோறும் ஊதியம் தரக்கோரியும் ரேஷன் கடை ஊழியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடை நிரந்தர ஊழியர்கள், தாற்காலிக ஊழியர்களுக்கு பல மாதங்களாக அரசு ஊதியம் தரவில்லை. இதுகுறித்து ஊழியர் சங்கத்தினர் புதுச்சேரி அரசை பல நிலைகளில் வலியுறுத்திவந்தனர்.
இந்நிலையில், காரைக்கால் நியாய விலைக்கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், பாரதியார் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தின் வாயிலில் திங்கள்கிழமை ஒட்டுமொத்த ஊழியர்களும் கலந்துகொண்டு புதுச்சேரி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் ரஹ்மத்பாட்ஷா தலைமை வகித்தார். அவர் பேசும்போது, காரைக்கால் மாவட்டத்தில் 70 ரேஷன் கடைகளில் நிரந்தர ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் 125 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 12 மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பல கட்டமாக அரசிடம் வலியுறுத்தியும், பணி செய்த காலத்துக்கான ஊதியத்தை தராமல் உள்ளது. நிலுவை மாதங்களின் ஊதியத்தை உடனடியாகத் தருவதோடு, ஒவ்வொரு மாதமும் மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கு தரும் காலத்திலேயே ஊதியத்தை முறையாக ரேஷன் கடைக்காரர்களுக்கும் அரசு தரவேண்டும்.
இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லையென்றால் ஊழியர்களுடன் கலந்துபேசி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
ஊழியர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்தன.