ஜேசிஐ நிர்வாகிகள் பொறுப்பேற்பு
காரைக்கால் ஜேசிஐ அமைப்பின் தலைவர், ஆட்சிமன்றக் குழுவினர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
காரைக்கால் ஜேசிஐ அமைப்பின் தலைவர், ஆட்சிமன்றக் குழுவினர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் (ஜேசிஐ) என்ற அமைப்பு காரைக்காலில் செயல்படுகிறது. புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதிய தலைவராக ஆர்.சங்கர் பொறுப்பேற்றார். அவருக்கு கடந்த ஆண்டுக்கான தலைவர் பா.சரவணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
புதிய தலைவர் சங்கர், தமது ஆட்சிமன்றக் குழுவினருக்கும், புதிதாக அமைப்பில் இணைந்த 7 உறுப்பினர்களுக்கும் மண்டல தலைவர் கே.வெங்கடேஷ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மண்டலத் தலைவர் உள்ளிட்டோர், ஜேசிஐ அமைப்பின் சேவைத் திட்டங்கள், வரும் ஆண்டில் புதிய நிர்வாகிகள் மேற்கொள்ளவேண்டிய செயல் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
காரைக்காலில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவோருக்கு கௌரவம் செய்யப்பட்டது. காரைக்கால் ஜவஹர் நவோதய வித்யாலயா முதல்வர் பி.ஹெலன்மேரிக்கு நேஷனல் பில்டர் விருது, மருத்துவர் பாபு ராஜேந்திரனுக்கு சல்யூட் தி சைலன்ட் ஒர்க்கர் விருது, காரைக்கால் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவன உரிமையாளர் ஆர்.எம்.ஜஃபர் ஹூசைனுக்கு யங் பிசினஸ் மேன் விருது, பி.குமாருக்கு பெஸ்ட் சோஷியல் சர்வீஸ் விருது வழங்கப்பட்டது.
மேலும் காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியில் துறை வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகி ஜி.வெங்கடேஷ், மண்டல துணைத் தலைவர் கவிதா செந்தில், சேம்பர் ஆஃப் காமர்ஸ் முன்னாள் தலைவர் அமுதா ஆர்.ஆறுமுகம், வ.சிங்காரவேலு, எல்.ஐ.சி. கிளை மேலாளர் எஸ்.முரளி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவிஞர் நாகை நாகராஜன் சிறப்புரையாற்றினார். செயலர் எஸ்.சண்முகப்பிரபு நன்றி கூறினார்.