காரைக்கால் வானொலியில் சுதந்திர தின நாளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படவுள்ளன.
காரைக்கால் பண்பலை வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் முனைவர் ஜி.சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர தினமான புதன்கிழமை காலை 7.05 மணிக்கு தலைநகர் தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றிவைத்து பிரதமர் நரேந்திரமோடி ஆற்றும் சுதந்திர தின உரை நேரடி ஒலிபரப்பாகும். இதன் தமிழாக்கம் இரவு 9.30 மணிக்கு கேட்கலாம்.
காலை 11 மணிக்கு "விடுதலையின் பெருமை வேர்களாலா, விழுதுகளாலா' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் ஒலிபரப்பாகும். பகல் 12.10 மணிக்கு பரிமாற்றம், தொலைபேசி வழி நேரடி நிகழ்ச்சியில் "ஒற்றுமையின் பலமும் அவசியமும்' என்ற தலைப்பில் நேயர்கள் தங்கள் க ருத்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.
பிற்பகல் 2.30-க்கு சுதந்திர வானில் சிகரங்கள் என்ற தலைப்பில் சிந்தனை மன்றம். மாலை 4 மணிக்கு சுதந்திர தின சிறப்பு செவ்வானம், வேதாரண்யம் வடக்கு வீதி உப்பு சத்தியாகிரக நினைவுக் கட்டடம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சி.
மாலை 6.20 மணிக்கு புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமியின் சுதந்திர தின உரையும், இரவு 7 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் சுதந்திர தின உரையும் ஒலிபரப்பாகும் என அதில் கூறப்பட்டுள்ளது.