காரைக்கால் கோயில்கள் நிர்வாகத்தினர் மீது துணை நிலை ஆளுநருக்கு புகார்
அமைச்சரவை செயலர் அந்தஸ்த்தில் காரைக்கால் மாவட்ட கோயில்களின் நிர்வாகங்களை கவனிக்க அலுவலரை அரசு நியமிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயலர் அந்தஸ்த்தில் காரைக்கால் மாவட்ட கோயில்களின் நிர்வாகங்களை கவனிக்க அலுவலரை அரசு நியமிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ஏ.ஆர். சந்திரமௌலி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு புதன்கிழமை அனுப்பி புகார் மனு விவரம் :
காரைக்காலில் புகழ்பெற்ற ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சேர்ந்ததாக ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. புதுச்சேரி அரசு இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட கோயிலாகத் திகழும் இதன் நிர்வாகத்தைக் கவனிக்க, அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய அறங்காவல் குழுவினரை நியமித்தது.
இவர்கள் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு நீண்ட காலமாக கோவில் தனி அலுவலர், நிர்வாக அலுவலர் (கோயில்கள்) கட்டுப்பாட்டில் இருந்தது.
நித்யகல்யாண பெருமாள் கோயிலுக்கு புதிதாக வெள்ளி ரதம் தயார் செய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ரதம் இதுவரை தயார் செய்யவில்லை. இதற்கான கணக்கை புதிய அறங்காவல் நிர்வாகத்திடம் முந்தைய தனி அலுவலர் இதுவரை ஒப்படைக்கவில்லை என தெரியவருகிறது. இதனால் ரதம் முழு நிலையை அடையவில்லை. நிர்வாக அலுவலர் (கோயில்கள்) பொறுப்பில் இருந்த அலுவலரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவர்களது நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள், தவறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், காரைக்கால் பகுதி கோயில் சொத்துகளைப் பெரும் செல்வந்தர்களும், அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களும் குறைந்த வாடகைக்கு வாங்கிக் கொண்டு, மற்றவர்களுக்கு அதிக வாடகைக்கு விட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். பல லட்சத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளனர். இதிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்தேகம் எழுகிறது.
இந்து சமய அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களில் உள்ள பஞ்சலோக விக்ரமும், ஆபரணங்களும் உண்மையானவைதானா என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியதும் மிகவும் அவசியமாகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் நிர்வாகங்கள் பலரால் சீர்குலைக்கப்பட்டுவிட்டன. கோயில் சொத்துகள் பெருமளவு தனியார் வசம் சென்றுவிட்டன. இதற்கு கோயில் நிர்வாகத்தைக் கவனித்தவர்களுக்கே முழு பொறுப்பு உண்டு. எனவே, இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களின் நிர்வாகத்தைக் கவனிக்க, அமைச்சரவை செயலர் அந்தஸ்த்தில் சிறப்பு அலுவலரை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.