ராஜீவ்காந்தி நினைவு நாள் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி காரைக்கால் ஆட்சியரகத்தில் எம்.எல்.ஏ., சார்பு ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி காரைக்கால் ஆட்சியரகத்தில் எம்.எல்.ஏ., சார்பு ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் ஆட்சியரகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், புதுச்சேரி மின் திறல் குழுமத் தலைவருமான கீதாஆனந்தன், மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து, காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அ.அல்லி மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அரசுத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வன்முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகளை மும்மதத்தை சேர்ந்த பிரமுகர்கள் விளக்கிப் பேசினர்.