முகப்பு
காரைக்கால்

பொதுப் பணித்துறையினர் மீது புகார்: கட்டட சுண்ணாம்புக் கழிவுகள் கொட்டப்படுவதால் அலையாத்திக் காடு அழியும் அபாயம்

பொதுப் பணித்துறையினர் மீது புகார்: கட்டட சுண்ணாம்புக் கழிவுகள் கொட்டப்படுவதால் அலையாத்திக் காடு அழியும் அபாயம்

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:21 AM
பகிர்:

கடற்கரையில் அலையாத்திக் காடு பகுதியில் இடிக்கப்பட்ட கட்டட சுண்ணாம்புக் கழிவுகள் கொட்டப்படுவதால், அழகிய காடு பகுதி அழியும் அபாயம் உருவாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கப்படுகிறது.
காரைக்கால் தோமாஸ் அருள் வீதி, விளையாட்டு அரங்கம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே இதனருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகள் மற்றும் சுண்ணாம்புக் கலவைகள், காரைக்கால் கடற்கரையோர அலையாத்திக் காடு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. சுண்ணாம்பு கரைசல் அலையாத்திக் காடு பகுதி வேர் நிலைக்குச் சென்றால், காடு அழிந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காரைக்கால் கடற்கரை சாலை பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் ஜெ. சிவகணேஷ் ஞாயிற்றுக்கிழமை கூறியது : 
காரைக்கால் கடற்கரையில் உள்ள அழகுகளில் அலையாத்திக் காடும் ஒன்றாகும். அலையாத்திக் காடு இருப்பதை வெளிநாட்டுப் பறவைகள் பயன்படுத்திக்கொள்கிறது. கோடியக்கரைக்குச் செல்லும் பறவைகள் இந்த பகுதியில் சில நாள்கள் தங்கிச் செல்கின்றன. இது சுற்றுலாவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. அலையாத்திக் காடு பகுதியை மேலும் சுற்றுலாவினரை ஈர்க்கும் வகையில் மேம்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகிறோம். இந்நிலையில், கட்டட இடிபாடுகள் சுண்ணாம்புக் கலவையுடன் கூடியதை, அலையாத்திக் காடு பகுதியில் கொட்டி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தும்போது, நீதிமன்றக் கட்டடப் பகுதியிலிருந்து கொண்டு வருவதாகவும், பொதுப் பணித்துறை அதிகாரிகள் இந்த பகுதியில் கொட்டுமாறு கூறியதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது நாளடைவில் அலையாத்திக் காட்டின் செடிகளின் வேர்களை அழுகச் செய்துவிடும். இயற்கையான அழகு அழிந்துவிடும் ஆபத்து உள்ளது. எனவே கழிவுகள் இந்த பகுதியில் கொட்டுவதை உடனடியாக கைவிட்டு, கொட்டப்பட்டவற்றை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.