திருநள்ளாறு ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயிலில், அவரது அவதார வழிபாடு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பகுதி நளன் குளம் அருகே ஸ்ரீ சீரடி சாய்பாபா வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. இங்கு சீரடி சாய்பாபாவின் அவதார நாள் உள்ளிட்ட முக்கிய நாள்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ராம நவமி நாள் சீரடி சாய்பாபாவின் அவதார நாள் என்பதால் சனிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, காலை 10 முதல் 12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகலில் சிறப்பு ஆரத்திகள் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை நிகழ்வாக பஜனையும், சிறப்பு ஆரத்திகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் திருநள்ளாறு மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சீரடி சாய்பாபா பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழிபாட்டுத் தல நிர்வாகத்தினர்
செய்திருந்தனர்.