ஜப்பான் நாட்டில் தற்காப்புக் கலை பயிற்சி மேற்கொண்டு, காரைக்கால் திரும்பிய தற்காப்புக் கலை பயிற்சியாளருக்கு, காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால் வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தார்.
காரைக்காலில் செயல்பட்டு வரும் இண்டர்நேஷனல் வி.ஆர்.எஸ். மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதெமி நிறுவனரும், தலைமை பயிற்சியாளருமான வி.ஆர்.எஸ். குமார், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கெம்புபோஜோவில் 17 நாள்கள் தங்கி, நிஞ்சா, கெம்போ, பட்டோடு, கென்டோ, ஸ்போச்சான், சாமுராய், வாள் பயிற்சிகளை மேற்கொண்டு, அதற்கான சான்றுகள் மற்றும் கருப்புப் பட்டைகளையும் பெற்று காரைக்கால் திரும்பினார். அவருக்கு, காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், முன்னாள் அமைச்சர் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கீதா ஆனந்தன் (திருமலைரான்பட்டினம்), சந்திரபிரியங்கா (நெடுங்காடு) ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.