திருநாள்ளாறு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பணியிலிருந்த ஒப்பந்த ஊழியர் ஞாயிற்றுக்கிழமை இயந்திரம் மோதி உயிரிழந்தார்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள செல்லூரில் சோப்பு மூலப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் சேத்தூர், பண்டாரவாடை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் மகன் பாரதி (21) ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, பணியிலிருந்த பாரதியின் மீது தானியங்கி (லிப்ட்) இயந்திரம் மோதியது. தலையில் பலத்த காயமடைந்த பாரதியை, தொழிற்சாலை சகஊழியர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்து பார்த்தபோது ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, திருநள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.