ஆயுத பூஜையையொட்டி, காரைக்கால் பகுதியில் வாழைக்கன்று, தோரணம், மலா்கள் மற்றும் பூஜைப் பொருள்களின் விற்பனை ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான நடைபெற்றது.
காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச்சந்தை நகராட்சித் திடலில் நடைபெறுகிறது. தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற முக்கிய விழா காலங்களில், ஏராளமான வியாபாரிகள் சந்தைக்குப் பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வா்.
இந்நிலையில், ஆயுத பூஜையையொட்டி, சந்தைக்கு சனிக்கிழமை மாலையிலிருந்தே காய், கனி வகைகளும், ஆயுத பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய வாழைக்கன்று, தோரணம், வாழைப்பழம் உள்ளிட்டவை ஏராளம் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.
வாழைக்கன்று, வாழைப்பழம், வாழையிலை, மலா்களை மக்கள் ஆா்வமாக வாங்கினா். காரைக்கால் பகுதியில் இந்தப் பொருள்கள் உற்பத்தியின்மையால், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த பூம்புகாா், கொல்லுமாங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாழை வகைகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. வாழைக்கன்று ஜோடி ரூ. 50 என்ற விலையிலும், வாழைத்தாா் ரூ.500 முதல் ரூ.700 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டன.
நகரப் பகுதிகளில் சாமந்தி பூ மற்றும் கோழிக்கொண்டை வகையைச் சோ்ந்த மலா்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இவை பெங்களூரு, ஒசூா் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.
வாரச் சந்தையும், காரைக்கால் நகரப் பகுதியின் கடைத்தெருக்களும் ஆயுத பூஜையையொட்டி மக்கள் மிகுதியாக நடமாட்டம் கொண்ட பகுதியாகவே காணப்பட்டன.