அம்பகரத்தூரில் சம்பா நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
காவிரி நீர் வரத்தொடங்கிய நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர். இந்நிலையில், வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வேளாண் தொழிற்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) நிதியுதவியில், திருள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூர் உழவர் உதவியக வளாகத்தில் சம்பா சாகுபடியில் நீர் மேலாண்மை மற்றும் நெல் சாகுபடி தொழிற்நுட்பங்கள் குறித்த பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டன.
பயிற்சிக்கு கூடுதல் வேளாண் இயக்குநர் ஜே. செந்தில்குமார் தலைமை வகித்தார். காரைக்கால் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு சம்பாவுக்குத் தேவையான அனைத்து இடுபொருள்களும் மானிய விலையில் வழங்க ஏற்பாடு செய்துள்ளதையும், பாசன நீரையும், இடு பொருளையும் சரியான அளவில் பயன்படுத்தி விளைச்சலை பெருக்குவதற்கான யோசனைகளை அவர் விவசாயிகளுக்கு தெரிவித்துப் பேசினார். பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஏ.எல். நாராயணன், சம்பா நெல் சாகுபடியில் நீர் மேலாண்மை குறித்தும், வேளாண் அலுவலர் பி. அலன் சம்பா சாகுபடி தொழிற்நுட்பங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினர்.
வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் மூலம் அம்பரகத்தூரில் தங்கி விவசாயிகளுடன் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு, நெல் விதை நேர்த்தி செய்தல் மற்றும் அதன் பயன்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு வேளாண் துறையினர் விளக்கம் அளித்தனர். முன்னதாக, அம்பகரத்தூர் பகுதி வேளாண் அலுவலர் ஆர். சரவணன் வரவேற்றார். நிறைவாக ஆத்மா வட்டார வளர்ச்சி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அம்பகரத்தூர் உழவர் உதவியத்தை சேர்ந்தோர் செய்திருந்தனர்.