கரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட அதிகாரிகள்
காரைக்காலில் ஆட்சியருக்கு கரோனா உறுதியானதால், அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிகாரிகள் உள்ளிட்டோா் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனா்.
காரைக்கால்: காரைக்காலில் ஆட்சியருக்கு கரோனா உறுதியானதால், அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதிகாரிகள் உள்ளிட்டோா் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் ஐ.ஏ.எஸ். தோ்வில் வெற்றி பெற்றவருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள், கல்வித் துறையினா், செய்தியாளா்கள் பங்கேற்றனா்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், மேற்கண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள், நலவழித்துறையின் அறிவுறுத்தலின்பேரில் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனா்.
இதுகுறித்து, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் சனிக்கிழமை கூறியது:
ஆட்சியரகத்தில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனா். இவா்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதை குறிப்பிடும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. கரோனா உறுதியாகவில்லையெனில், நோட்டீஸ் அகற்றப்படும் என்றாா்.