ஹோர்முஸ் நீரிணையை முடக்கிய ஈரானின் கடற்படைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!
ஈரானின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது குறித்து...
இஸ்ரேலின் தாக்குதலில், ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் விநியோகத்திற்கு முக்கிய வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் கடற்படையினர் முடக்கினர். இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதற்கு முக்கிய காரணமான ஈரானிய புரட்சிகர காவல்படையின் கடற்படைத் தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழக்கிழமை (மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில், நேற்று இரவு இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதி அலிரேசா டங்சிரி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டனர் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு கமேனி, மூத்த ராணுவ அதிகாரிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.