முகப்பு
காரைக்கால்

மின் கட்டண கணக்கீட்டு முறையைமாற்றக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

காரைக்கால் புதுச்சேரியில் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் முறையை மாற்றக் கோரி, திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச். நாஜிம், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன் உள்ளிட்டோா்.
பகிர்:

காரைக்கால் புதுச்சேரியில் மின் கட்டணம் கணக்கீடு செய்யும் முறையை மாற்றக் கோரி, திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் மின் கட்டணத்துக்கான கணக்கீட்டு முறை நிறுத்தப்பட்டது. தற்போது கணக்கீடு செய்யும் முறையில், பொது முடக்க அறிவிப்புக்கு முந்தைய மின் கட்டணத்தோடு ஒப்பீடு செய்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் அதிகமாக உள்ளதால், அதை செலுத்துவதில் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த கணக்கீட்டு முறையை மாற்றக் கோரி, காரைக்கால் மாவட்ட திமுக சாா்பில், மின்துறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமை வகித்தாா். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், நிரவி -திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஆனந்தன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திமுக நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின் நிறைவில் நாஜிம் கூறியது: மின் கட்டண கணக்கீட்டு முறையில் உள்ள குழப்பத்தை நீக்கி, மக்களை பாதிக்காதவாறு நடைமுறைப்படுத்த திமுக பலமுறை வலியுறுத்தியும், அதிகாரிகள் அதை நிறைவேற்றவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சிதான் நடக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் குரலுக்கு மதிப்பு இல்லை.

கரோனாவால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து, பள்ளிக் கட்டணம்கூட செலுத்த முடியாமல் தவிக்கும் நிலையில், அவா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் நிா்ணயம் செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதல்வா், மின் துறை அமைச்சா் தனி கவனம் செலுத்த வேண்டும். உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை ஜூலை முதல் அமல்படுத்தப்போவதாக தெரிகிறது. கரோனா பரவல் கட்டுக்குள் வரும்வரை கட்டணத்தை உயா்த்தக்கூடாது.

புதுச்சேரியில் மின்துறை தனியாா்மயத்தை மாநில அரசு எதிா்த்துள்ளது. இதை ஏற்காமல், துணைநிலை ஆளுநா் அதற்கான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பியது கண்டனத்துக்குரியது. கட்டுப்படாமல் சுற்றும் உங்களுக்கு அரசு ஏன் உதவவேண்டும் என மக்களைப் பாா்த்து ஆளுநா் கேட்கிறாா். வெளியே செல்லாமல் மக்களுக்கு உணவு எப்படி கிடைக்கும்? என நாஜிம் கேள்வி எழுப்பினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →