கேரளத்தில் கனமழை! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
கேரளத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கேரளம் மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கேரளத்தின் 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை (ஏப். 30) மாலை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அம்மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, ஏப். 29 முதல் வரும் மே 3 ஆம் தேதி வரையில் கேரளத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.