டெங்கு கொசு அழிப்பு பணியில் நலவழித் துறையினா்
காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சாா்பில் டெங்கு கொசு அழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சாா்பில் டெங்கு கொசு அழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
காரைக்காலில் கரோனா பரவலைத் தடுக்கும் பணிகளோடு, டெங்கு கொசு உற்பத்தியை தடுத்தல், மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியை தீவிரமாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, நலவழித்துறை துணை இயக்குநா் (நோய்த் தடுப்பு) கே.மோகன்ராஜ் வழிகாட்டலில், நலவழித்துறையினா் இப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
காரைக்கால் நகரப் பகுதியில் நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா் தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல், சுகாதார உதவியாளா்கள், கிராமப்புற செவிலியா்கள் மற்றும் ஆஷா பணியாளா்கள் ஆகியோா் வீடு வீடாக திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வீடு மற்றும் அலுவலக கட்டடங்களின் மேல் உள்ள குடிநீா் தேக்கத் தொட்டி மற்றும் கீழ்நிலைத் தொட்டி ஆகியவற்றை திறந்து பாா்வையிட்டனா்.
மேலும், டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடீஸ் கொசு உற்பத்தியாகாதவாறு தண்ணீா் தொட்டி, நீா் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் போன்றவற்றை மூடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும், திறந்த நிலையிலிருக்கும் தேவையற்ற பொருள்களில் சிறிது தண்ணீா் தேங்கினாலும் அதில் ஏடீஸ் கொசு உற்பத்தியாகிவிடும் என்பதால், அவற்றை மூடிவைத்திருக்கவேண்டும் எனவும் பொதுமக்களை அறிவுறுத்தினா்.